Sunday, January 1, 2012

ஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.இந்த புத்தாண்டானது இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள். தற்போது காமிக்ஸ் உலகில் ஒரு புயல் வீச துவங்கியுள்ளது. தானே புயல் போல இல்லாமல் இந்த புயல் ஒரு வரவேற்க்கதக்க புயலே.

லயன் கம்பேக் ஸ்பெஷல் என்பதே இந்த புயலின் பெயர். நூறு ருபாய் விலையில் வரவிருக்கும் இந்த புயல் ஜனவரி மாதம் பத்தாம் திகதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

 

  • லயன் காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயனின் பிரத்யேக வலைத்தளம்: http://lion-muthucomics.blogspot.com/

இனிமேல் ஓரளவுக்கு தமிழில் காமிக்ஸ் தொடர்ந்து வரும் என்றே தெரிகின்றது.ஆகையால் நம்மால் இயன்ற ஒரு வேலையை நாம் செய்வோம். காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவரும் நம்மால் இயன்ற அளவுக்கு தமிழ் காமிக்ஸ் கதைகளை பற்றி வலைப்பதிவேட்டில் பதிவுகளை ஏற்றி ஒரு பரபரப்பான சூழலை உருவாக்க முயல்வோம். அதன் ஒரு சிறு முயற்சியாக நானும் என்னுடைய வலைப்பூவை தூசி தட்டி,ஒரு வழியாக தயார் செய்துள்ளேன். இனிமேல் முழுநீள இந்திரஜால் காமிக்ஸ் கதைகளை என்னுடைய தளத்தில் நீங்கள் வழமை போல படிக்கலாம்.

இன்றைய இளைய தலைமுறை என்ன வகையான காமிக்ஸ் கதைகளை படிக்கிறது என்று தெரிந்துகொள்ள மும்பை லேண்ட்மார்க் கடைக்கு சென்று கிட்டத்தட்ட ஒரு வாரம் கவனித்தேன். அதிகம் பேர் இன்றும் ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளையே விரும்பி படிக்கின்றனர் (என்ன கொடுமை சார் இது?). அதிலும் டீனேஜ் வாசகர்கள் ஆர்ச்சி கதைகளை விரும்பி படிக்கின்றனர். அனால் இந்த வகை கதைகள் தமிழுக்கு எப்படி செட் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் இதழில் ஆர்ச்சி கதைகளை இமிடேட் செய்து ஒரு படக்கதை தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கதையானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது வசனங்கள் இரண்டு மொழியிலும் இருந்தன. ஷ்யாமின் தூரிகையில் வண்ணத்தில் வந்த இந்த பள்ளி இறுதியாண்டு மாணவர்களின் கதை அதிக வரவேற்ப்பை பெறாமல் வெறும் பத்தே பத்து வாரங்களில் மங்கலம் பாடப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதைப்பற்றி நண்பர் ராகவனிடம் விவாதித்து கொண்டிருந்தபோதுதான் அவர் தமிழில் ஏன் இந்த ஆர்ச்சி கதைகள் வரவில்லை? என்று கேட்டார்.அப்போது நான் அவருக்கு டில்லியில் இருந்து வந்த (இப்போது நொய்டாவில்) கோமிக் வேர்ல்ட் பற்றி விளக்கி கூறினேன். அதில் ஆர்ச்சி கதைகள் வந்துள்ளன என்பதை அறிந்த ராகவன் ஆச்சர்யப்பாட்டார்.அந்த விவாதத்தின் முடிவாக ஆரம்பித்த தேடுதல் படலத்தின் விளைவே இந்த பதிவுக்கான ஆர்ச்சி சிறுகதைகள். ஆர்ச்சி கதை வரிசைகளில் முக்கால்வாசி ஓரிரு பக்க சிறுகதைகளே.இதைத்தவிர சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட கதை தொடராக செல்வதுண்டு.


ஆர்ச்சி காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டு சரியாக எழுபது வருடங்கள் இந்த மாதத்துடன் முடிந்துள்ளது. அமெரிக்காவில் ரிவர்டேல் என்ற ஊரில் வசிக்கும் ஆர்ச்சி ஆண்டிரூஸ் என்கிற ஒரு பதின்ம வயது பள்ளி மாணவனே இந்த கதைத் தொடரின் நாயகன். நடுத்தர வர்கத்தின் பிம்பமாக இருக்கும் ஆர்ச்சி தன்னுடன் படிக்கும் வெரோனிகா என்கிற பணக்கார மாணவியை விரும்புகிறான். அதே சமயம் மற்றுமொரு நடுத்தர வர்க்க மாணவியான பெட்டி ஆர்சியை விரும்புகிறாள். ஆர்சிக்கு ஜக்ஹெட் என்கிற ஒல்லியான சாப்பாட்டுராமன் தான் நண்பன். ரெக்கி என்கிற சக வகுப்பு மாணவனுடன் ஆர்சிக்கு எப்போதும் ஒரு போட்டி நிலவும். டில்டன் என்கிற மகா புத்திசாலி,மூஸ் என்கிற பலசாலி என்று ஆர்சியின் வகுப்பில் பலதரப்பட்ட நண்பர்கள். சில சமயங்களில் விற்பனைக்காக இந்திய வம்சாவழி மாணவர்கள் இந்த கதையில் வருவதுண்டு.

இந்த கதைகளில் ரெக்கி ஆர்சிக்கு எதிரியாக பாவிக்கப்பட்டாளும்கூட உண்மையில் இந்த தொடரில் வரும் அனைத்து பதிரங்கலுமே ஒருவித சிநேக மனப்பான்மையுடன் இருப்பதே இந்த தொடரின் வெற்றிக்கு காரணம். இந்த கதையில் வரும் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், கேண்டீன் நடத்தும் நடுத்தர வயதினர், பள்ளியில் வேலை செய்யும் முதியவர்கள், பள்ளி பிரின்சிபால் போன்றோரை அமெரிக்காவில் அன்றாட வாழ்வில் சந்திக்க முடிந்தாலும் இந்த சிநேக மனப்பான்மை துளியுமில்லாத காரணத்தினால் இந்த கதையை Aspirational Longing வகையில் ரசிப்பதுமுண்டு என்று என்னுடைய நண்பர் கூறுவார். இதுவே கூட கதையின் தொடர்ச்சியான வெற்றிக்கு மூலகாரணமாகவும் இருக்கலாம்.

 

கோமிக் வேர்ல்ட் தமிழ் இதழ்கள் - ஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - சாம்பிள் கதை 01

Archie 1

கோமிக் வேர்ல்ட் தமிழ் இதழ்கள் - ஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - சாம்பிள் கதை 02

Archie 2

மிக மிக விரைவில் திரும்ப மற்றுமொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்- முழு பதிவுடன் வருகிறேன்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,  
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

5 comments:

  1. நண்பரே,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    குமுதம் இதழில் பிளாண்டி மற்றும் ஸ்பைடர்மேன் கதைகள் வந்த தருணத்தில் இந்த ஆர்ச்சி கதைகளும் வந்ததாக நினைவு. சரியா?

    ReplyDelete
  2. சூப்பர் பாஸ் இன்னும் பல பதிவுகளை எழுதுங்கள். தமிழில் ஆர்ச்சி புத்தகங்கள் நல்ல சிந்தனைதான். பொறுத்திருந்து பார்ப்போம். :)

    ReplyDelete
  3. நல்ல பதிவு நண்பரே

    ஆர்ச்சி, விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் நன்றாக வரும் என்று நம்புகிறேன்
    தொடர்ந்து இதுமாதிரியான பதிவுகளை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

    Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin